Monday 15 July 2013

"பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முன்வர வேண்டும்

மொபைல் போன் வாங்கி தர மறுத்த காரணத்தால், கோவையில் கடந்த ஆறுமாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவியர் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்ந்த "ஆப்பிள் ஐ" போனை வாங்கி தர, நடுத்தர வர்கத்தை சேர்ந்த தந்தை மறுத்ததால், மனமுடைந்த கோவை கல்லூரி மாணவி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மொபைல் போன் வாங்கி தர தந்தை மறுத்த காரணத்தால், கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி அஸ்வதி, மனமுடைந்து கடந்த 11ம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்றைய இளைய சமூகத்தினரின் மன நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை, இவ்விரு சம்பவங்களும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
தங்கள் குடும்பத்தின் பின்னணி, நிதிநிலை உள்ளிட்டவற்றை மறந்து, சமுதாயத்தில் தங்களின் மதிப்பு குறைந்துவிட கூடாது என்பதற்காக ஆடம்பர பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், இன்றைய இளைய சமூகத்தினர்.
வாழ்கையில் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் எவை, அடிப்படை தேவைகளுக்கு அடுத்தப்படியாக பட்டியலில் உள்ள பொருட்கள் எவை என்பது குறித்து இவர்களுக்கு தெரிவதில்லை.
இன்றைய சூழலில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர்கள் செலவிட முடியாததே, மேற்குறிப்பட்ட துயர சம்பவங்கள் நடக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
பெற்றோருக்கு விழிப்புணர்வு தேவை
டாக்டர் சீனிவாசன் கூறியதாவது: "வளர் இளம் பருவத்தில் உள்ள குழுவில், ஒருவர் செய்வது போன்றே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் காணப்படும். நட்சத்திர ஓட்டலில் ஒரு மாணவர் பிறந்தநாள் விருந்து வைத்தால், தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை மறந்து, அதே போன்று தானும் செயல்பட வேண்டும் என்று நினைப்பதே இதற்கு காரணம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதே, இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
அடம் பிடித்தால், கண்டு கொள்ளாதீர்
டாக்டர் மோனி கூறியதாவது: "வளர் இளம் பருவத்தினரிடையே, எந்த செயலை வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் அதிகம் காணப்படும். 84 சதவீத குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோரே முன்மாதிரியாக கொண்டு செயல்படுகின்றனர். 15 சதவீதத்தினர் ஆசிரியர்களையும், நான்கு சதவீதத்தினர் சினிமா நடிகர், நடிகைகளை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகின்றனர்.
எது தவறு, எது சரி என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டும். அடம்பிடித்தால் கேட்டதை எல்லாம் வாங்கி தர கூடாது. ஐந்து அல்லது ஆறு முறை பெற்றோர் இவ்வாறு, செயல்பட்டால், குழந்தைகளுக்கு அடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. வளர் இளம் பருவத்தில் குழந்தைகள் கேட்பதை உடனடியாக மறுக்காமல், ஏன், எதற்கு என்று கேட்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முன்வர வேண்டும்." இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment