Sunday 14 July 2013

குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: 15ம் தேதி கடைசி

சென்னை: குரூப்-4 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவு செய்ய, நாளை (15ம் தேதி) கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை மாலைக்குள், பதிவு செய்துவிட வேண்டும். ஏற்கனவே, ஏழு லட்சம் பேர் வரை பதிவு செய்திருப்பதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், காலியாக உள்ள, 5,566 இடங்களை நிரப்ப, "குரூப் 4" நிலையில், வரும் ஆகஸ்ட், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது.
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்பதால், விண்ணப்பிக்கும் தேதி துவங்கிய, ஜூன், 15ம் தேதியில் இருந்து, ஒவ்வொரு நாளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இதன் காரணமாக, இதுவரை, ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வாணைய (www.tnpsc.gov.in) இணையதளத்தில் பதிவு செய்ய, நாளை கடைசி நாள். நாளை மாலைக்குள், பதிவு செய்துவிட வேண்டும். தேர்வு கட்டணத்தை செலுத்த, 17ம் தேதி கடைசி நாள்.
அரசு துறைகளில் பணியாற்றுபவர்களும், வழக்கமாக, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பர். உயரிய பதவிகளில் சேரவும், பதவி உயர்வு பெறவும், இதுபோன்ற தேர்வுகளை எழுதுகின்றனர். பணிபுரியும் துறை அலுவலரின் அனுமதியுடன், போட்டித் தேர்வை எழுதலாம்.
அந்த வகையில், காவல் துறையில், "கான்ஸ்டபிள்"களாக இருக்கும் போலீசார், குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த முறை, சென்னையில், குரூப்-4 தேர்வை எழுத, துறை அதிகாரிகள், என்.ஓ.சி., (தடையின்மை சான்று) வழங்க மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
தற்போது பெறும் சம்பளத்தைவிட, கூடுதல் சம்பளம் பெறும் பணி என்றால், தேர்வை எழுத, அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். அந்த வகையில், போலீசார் சம்பளத்தைவிட, குரூப்-4 வேலையில், 500 ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. எனவே, அனுமதித்திருக்க வேண்டும் என, போலீசார் கூறுகின்றனர்.
போலீஸ் பணி, கடுமையாகவும், ஓய்வின்றி, தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை இருப்பதாலும், மன உளைச்சலில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதுபோன்ற நிலையை தவிர்த்து, நிம்மதியாக வேலை பார்க்கலாம் என, கருதி, குரூப்-4 தேர்வுக்கு, அதிகளவில் விண்ணப்பிக்கின்றனர்.
தேர்வு பெற்றால், போலீஸ் வேலையை உதறிவிட்டு, இளநிலை உதவியாளராகவோ, தட்டச்சர்களாகவோ சென்று விடுகின்றனர். இந்த முறை, அதிகாரிகள் என்.ஓ.சி., தராததால், விண்ணப்பிக்க முடியவில்லை என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
நாளை மாலையுடன், கெடு முடிவதால், உடனடியாக, என்.ஓ.சி., வழங்கி, தேர்வெழுத, அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment