Wednesday 10 July 2013

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த 16 வயதுச் சிறுமி படிக்க விரும்பினாள். தாய் அதை ஆதரித்தும், தகப்பனோ தன் அக்காள் மகனுக்கு (வயது 30) அவளைத் திருமணம் செய்துவைக்கக் கட்டாயப்படுத்தினான். அத்தை மகனும் அவனது பெற்றோரும் அவளைத் தொடர்ந்து படிக்க அனுப்புவதாக உறுதியளித்தனர். ஆனால் வாக்குறுதியை மீறினர்.

தாய்வீட்டிற்குத் திரும்பி வந்த அந்தப் பெண் தனது ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் தெரிவித்தாள். தாய் அவளை ஒரு பள்ளியில் 11ம் வகுப்பில் சேர்த்ததுடன் பள்ளிவிடுதியிலும் தங்க வைத்தார். கணவனும் குடும்பத்தாரும் அவளைக் காணவில்லை என்று நிலக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் 2013 ஏப்ரலில் புகார் பதிவு செய்தனர்.

பெண்ணுடன் தாயை காவல்நிலையத்திற்கு வரவழைத்த துணை ஆய்வாளர் கூறியது: "திருமணத்திற்குப் பின் உன் பெண்ணிடம் உனக்கு எந்த உரிமையும் கிடையாது.”

தாய் பின்வாங்காமல் மாவட்ட சட்ட உதவி மன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த மன்றம், சிறுமியாய் இருந்தபோது நடந்த திருமண‘ம் செல்லாது என்று செவ்வாயன்று (ஜூலை 9) தீர்ப்பளித்தது. பெண்ணின் தகப்பன், கணவன், அவனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் ஆணையிட்டுள்ளது.

மகளிடம் தாய்க்கு உரிமை இல்லை என்று “அறிவுரை” கூறிய அந்த மகளிர் காவல்நிலைய அதிகாரி மீது என்ன நடவடிக்கை? குறைந்தது சட்டத்தையும் சட்ட விதிகளையும் பெண்ணின் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளையும் படித்துத் தெரிந்துகொள், அவற்றை மதித்து நட என்றாவது அரசு ஆணையிட வேண்டும்.

பெண்ணுக்குத் துணையாக சட்ட உதவி மன்றம் தன் பணியைச் சரியாகச் செய்திருக்கிறது - பாராட்டுகள். தன் லட்சியத்தை நிறைவேற்றிப் நல்ல முன்னுதாரணமாகத் திகழ அந்தப் பெண்ணிற்கு வாழ்த்துகள். பெண்ணின் கனவை நனவாக்கப் போராடிய அந்தத் தாய்க்கு வணக்கங்கள்.

No comments:

Post a Comment