Friday 25 October 2013

ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை

தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை ஒரு மாதத்துக்குள் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீதம் ஏழை மற்றும் சமூகரீதியாக நலிவடைந்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே திருப்பி வழங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான கட்டணம் செப்டம்பர், ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் மூன்று தவணைகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணம் அல்லது அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ அந்தக் கட்டணத்தை இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்காக அரசு திருப்பி வழங்கும்.
செப்டம்பர் மாதத்திலேயே முதல் தவணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அக்டோபர் மாதம் முடிவடையும் நிலையில் ஏழை மாணவர்களின் கட்டணத்துக்கான முதல் தவணை இதுவரை வழங்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் புகார் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தச் சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான கட்டணத்தை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். மத்திய அரசிடம் ஒவ்வொரு மாணவருக்கான கட்டண விவரத்தையும் கணக்கிட்டு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கான கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment