Saturday 11 May 2013

தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களுடன் என்ஜினீயரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்தார்.

தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களுடன் என்ஜினீயரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்தார்.

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை ஆன்–லைன் மூலம் எடுத்து மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகமே மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் கூறினார்.

சட்டசபையில் தே.மு.தி.க. உறுப்பினர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘இம்மாத இறுதியில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதால், அந்த மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியை நீட்டிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து பேசியதாவது:–

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஜூலை 30–ந்தேதிக்குள் முடித்து, ஆகஸ்டு 1–ந்தேதி கல்லூரிகளில் வகுப்பு தொடங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.அதனால்தான் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளோம். கடந்த ஆண்டு மே மாதம் 21–ந்தேதிதான் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மே 9–ந்தேதியே தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டோம். என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20–ந்தேதி கடைசி நாளாகும்.

ஜூன் 5–ந்தேதி ரேண்டம் எண்ணும், ஜூன் 12–ந்தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படும். ஜூன் 21–ந்தேதி முதல் ஜூலை 30–ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி குறித்த காலத்திற்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஆகஸ்டு 1–ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் உடனடியாக என்ஜினீயரிங் படிப்பிற்கான விண்ணப்பத்தை வாங்கி, பூர்த்தி செய்து, அத்துடன் சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகமே சி.பி.எஸ்.இ. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஆன்–லைன் மூலம் டவுன்லோடு செய்து மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்.

தேர்வு முடிவுகள் வந்த பிறகு இணையதளத்தில் இருந்து மதிப்பெண் பட்டியலை மாணவர்களே டவுன்லோடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கலாம். எனவே, சி.பி.எஸ்.இ.மாணவர்களை, என்ஜினீயரிங் படிப்பில் சேர்ப்பதில் எவ்வித பிரச்சினையோ, குழப்பமோ இருக்காது.இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

No comments:

Post a Comment