Monday 16 September 2013

ஓணம் பண்டிகை

கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது

. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது "ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தி பெற்றது. தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். கேரள மக்கள் மகாபலி மன்னனை வரவேற்கும் விதத்தில் பூக்கோலத்தை வாசலில் வரைகின்றனர். நறுமணம் கமழும் பூக்களைப் போல உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதும் இதன் நோக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப் பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இது அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இது சிவனுக்கு உரியது. வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்காகவும் பூக்கோலம் இடுவதுண்டு. இது மட்டுமின்றி ஓணத்தன்று வீடுகளில் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் விளையாடுவர். கேரள பண்பாட்டுச் சின்னமாக  பூக்கோலம் திகழ்கிறது.
யானை அணிவகுப்பு: தெருவில் ஒரு யானை வந்தாலே குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பர். கேரளாவில்  ஓணத்திருவிழாவில் யானைப்பட்டாளத்தையே கண்டு ரசிக்கலாம். அவற்றின் நெற்றியை தங்கத்தட்டினாலான முகப்படாமினால் அழகுபடுத்தி இருப்பர். பாரம்பரியம் மிக்க பட்டாடைகள், ஒயிட்மெட்டல் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட குடைகள், பட்டுக்கயிறு, பிரத்யேகஅணிகலன்கள், உடலில் வரையப்பட்டிருக்கும் டிசைன் என்று யானைகள் அணிவகுத்துச் செல்வது தனியழகு. இங்கு நடக்கும் மரத் தொழிலுக்கு யானைகள் மிகவும் உதவுகின்றன. மேலும், இவை விநாயகரின் அம்சம் என்பதால் தெய்வீகமானவை. எனவே, அவற்றிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் ஊர்வலம் நடத்துகின்றனர்.
அம்மா ஜெபித்த ஸ்லோகம்: அசுரகுரு சுக்ராச்சாரியார், மகாபலிச்சக்கரவர்த்திக்காக விஸ்வஜித் யாகத்தை நடத்தினார். யாகபயனால் ஹோமகுண்டத்தில் இருந்து தேர்,வில், அம்புறாத்தூணி, பலவித கவசங்கள் கிடைத்தன. அவற்றுடன் மகாபலி தேவலோகம் சென்றான். தேவர்கள் அஞ்சி ஓடினர். தேவர்களின் தாய் அதிதி தன் பிள்ளைகளைக் கண்டு வருந்தினாள். காக்கும்கடவுள் விஷ்ணுவைச் சரணடைந்து,
யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாத
தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா
என்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டாள். யாகங்களால் ஆராதிக்கப்படுபவனே! பழமை மிக்கவனே! புதுமையானவனே! கங்கையை திருவடியில் கொண்டவனே! ஆறு போல பெருகி அருள் பொழிபவனே! கல்யாண குணம் மிக்க திருநாமங்களைக் கொண்டவனே! என்பது இதன் பொருள்.  விஷ்ணு ஆவணி திருவோண நட்சத்திரத்தில், அதிதியின் மகனாக வாமனராகப் (குள்ள வடிவம்) பிறந்தார். மகாபலியிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றினார். அதிதி ஜெபித்த இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் குழந்தைகள் தாய் மீது பாசமுடன் திகழ்வர்.
கேரளாவில் ஓணம் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் துவங்கி திருவோணம் வரை விழா நடத்தப்படும். தங்கள் நாட்டை சிறப்புடன் ஆண்ட மன்னர் மகாபலியை வரவேற்கும் விதத்தில், இந்த விழா கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திர நாட்களில், ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில், 64 வகை உணவு தயாரிக்கப்படும். ஐந்தாம் நாள் அனுஷத்தன்று, பாரம்பரிய படகுப்போட்டி நடத்தப்படும். ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் நாட்களில் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களில் ஓண ஊஞ்சல் ஆடுதல், கோலமிடுதல் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும். பத்தாம் நாள் திருவோணத்தன்று மூவகை பாயாசம், சிறப்பு உணவு வகைகள் என களை கட்டும். எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை அப்பன் கோயிலில் (வாமனர் கோயில்) வாமனருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இங்கே மகாபலி அமர்ந்து ஆட்சி செய்த சிம்மாசனமும் வைத்துள்ளனர்.
மன்னருக்கு வரவேற்பு: மகாபலி மன்னர் மலைநாடாக விளங்கிய கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். அவரது ஆட்சி செழிப்பாக இருந்தது. தானம், தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார். அவரது ஆட்சி போல், இன்றும் தங்கள் மண் செழிப்புடன் திகழ வேண்டும் என்ற கருத்தில், மகாபலியை நினைவு கூர்ந்து, அவரை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஓண சத்ய..: ஓணத்தன்று கேரள மக்கள் சாப்பிடும் உணவை ஓண சத்ய என்பர். இதற்கு ஓண விருந்து என்று பொருள். கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு தான் நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். புத்தம் புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக் காய் குழம்பு என உணவுகள் தயார் செய்யப்பட்டு அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு படைக்கப்படும். பின், குடும்பத்துடன், சாப்பிடுவர்.
.

No comments:

Post a Comment