Saturday 13 July 2013

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ. பொன்ராஜ்

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ. பொன்ராஜ். கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தபோது அவருடன் நெருங்கிப் பணியாற்றிய விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர். விருதுநகர் மாவட்டம் தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயன்ஸ் முடித்தவர். கோவை, தனியார் நிறுவனத்தில் குறுகிய காலப் பணி, பெங்களூர், இந்திய அறிவியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்ஸி.) இளநிலை விஞ்ஞானியாகப் பணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் ஆய்வு என அறிவியல் பயணத்தில் இருந்து, பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஏரோனாடிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் (ஏடிஏ) விஞ்ஞானியானார். அங்கு தலைமை இயக்குநராக இருந்த அப்துல் கலாமின் அறிமுகம் கிடைத்தது.
பேட்டி என அணுகியபோது முதலில் தயங்கிய பொன்ராஜ், "தினமணி' என்றதும் இசைந்தார்.
அப்துல் கலாமுடன் உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து...
ஏரோனாடிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ) பணியின்போது இலகு ரக போர் விமானங்கள் தயாரிக்கும் திட்டத்தில் பணியாற்றினேன். அத்திட்டத்தை ஆய்வு செய்ய கலாம் பெங்களூர் அலுவலகத்துக்கு வருவார். அப்போது பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் டிஆர்டிஓ தலைவராகவும் அப்துல் கலாம் இருந்தார்.
பின்னர் அவர் மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார். அந்த நேரத்தில்தான் "விஷன் 2020' என்ற சிந்தனையை அப்துல் கலாம் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ஜ்ஜ்ஜ்.ஹக்ஷக்ன்ப்ந்ஹப்ஹம்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினோம். அதற்காக கலாமின் யோசனைகளை அறிந்து கொள்ள அவரை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் அவரது இணையதளத்தைப் பராமரிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உங்களது குறிப்பிடத்தக்க பணி...
குடியரசுத் தலைவர் மாளிகையில் 35 துறைகள் உள்ளன. அவற்றில் 19 துறைகள் மின்னாளுகையின் (இ-கவர்னன்ஸ்) கீழ் கொண்டு வரப்பட்டன. அந்த காலகட்டத்தில் மாளிகை அலுவலக ஊழியர் முதல் செயலர்வரை அனைவருக்கும் கணினிப் பயிற்சி கொடுக்கப்பட்டது.
மாளிகைக்கு வரும் கடிதங்கள், கோப்புகள் உள்ளிட்டவை வரவேற்பறையிலேயே ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றப்படும். மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மின்னாளுகைத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு 50 மனுக்கள் மீது ஐந்து மணி நேரத்தில் முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டது. இந்த முயற்சியை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத் த முனைவதற்குள் கலாமின் பதவிக்காலம் நிறைவுற்றது.
பள்ளிக் குழந்தைகள் அறிவியலில் சிறந்து விளங்க என்ன செய்யலாம்?
ஆரம்பக் கல்வியின் அடிப்படை சரியாக இருக்க வேண்டும் என்றால் 6 முதல் 8 வரை ஏற்ற வயதாகும். அதேபோல் சராசரியாக ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில்தான், கணிதம் மற்றும் அறிவியல் திறமைகள் உருப்பெருகிறது, வளருகிறது. அதனால், இந்தப் பருவத்தில்தான் மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை வலுவாக வளர்ப்பதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுது மாணவர்களுக்கும் அறிவியலில் நாட்டம் வந்தால், அது நீடித்து நிலைக்கும்.
பொறியியல் துறையில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் குறித்து...
நம் நாட்டில் 1500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் 500 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. நாடு முழுவதும் ஒன்றரை கோடி பசுமைக் குடில்களைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான பொருள்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு பெறப்படுகின்றன. மாறாக, நாமே அவற்றை உற்பத்தி செய்யும் வகையில் நமது கல்வி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது போல் எல்லா துறையிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்குகின்றனவே?
11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர் கல்வி மற்றும் ஆராய்சிக்காக ரூ. 47,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ரூ. 17,000 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மீதி ரூ. 30,000 கோடி திருப்பி அனுப்பப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்படும் தொகை ஆசிரியர்கள், ஊழியர்களின் மாத ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் ஆய்வு மேம்பாட்டுக்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டால், அது வளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருக்கும்.
கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் பயிற்சியில் மாற்றம் அவசியமா?
கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை மேம்படுத்த வேண்டும். அவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராமப் பள்ளிகளில் குறைந்தது ஓராண்டாவது பணியாற்றும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம் ஆய்வாளர்களின் அனுபவத்தை பள்ளி ஆசிரியர்கள் அறிந்து மாணவர்களுக்கு உரிய வகையில் பாடம் நடத்த இயலும். இது தரமான கல்விக்கு வழி வகுக்கும்.
பொறியியல்-மருத்துவ கல்லூரிகளுக்கான இடைவெளி அதிகரிப்பது குறித்து...
மேலைநாடுகளில் 450 மக்களுக்கு ஒரு டாக்டர் பணியாற்றுகிறார். ஆனால், நம் நாட்டில் அந்த எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நிலை மாற அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறைய தொடங்கப்பட வேண்டும். மருத்துவப் படிப்பில் சேர சாதாரண மனிதர்களால் கட்டணம் செலுத்த இயலாது. இந்த நிலை மாறுவதற்கு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான விதிகளை மத்திய அரசு மாற்ற வேண்டும்.
நோயாளிகளே வராத மருத்துவக் கல்லூரிகளில் 500 படுக்கைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்குப் பதில், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குறைந்தது ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வரை முதலீடு செய்து, அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
அரசோடு சேர்ந்து தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள் அங்கு பயிற்சி எடுக்கவும், சேவை செய்யவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டால், பொது மக்களுக்கு தரமான மருத்து வசதி கிடைக்கும். இந்தியாவில் தரமான மருத்துவர்கள் உருவாவார்கள்.
கலாமின் புரா திட்டம் குறித்து...
கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அங்கு தன்னிறைவான நீடித்த வளர்ச்சி பெறுவதற்கு உருவாக்கப்பட்டது புரா திட்டம்.
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான தரமான கல்வி-மருத்துவம் அங்கு சென்றடையவும், அரசுத் திட்டங்கள் மக்களிடம் உடனடியாக, சிந்தாமல், சிதறாமல் சென்றடையவும் வழிசெய்யக் கூடிய ஒரு உன்னதத் திட்டம்தான் டாக்டர் கலாமின் புரா திட்டம்.
மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தேசிய இயக்கமாக அறிவித்து, ரூ. 1,000 கோடி அளவில், அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பின் மூலம் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.
டாக்டர் கலாமின் வழிகாட்டுதலுடன், டாக்டர் இந்திரேசன், ய.சு. ராஜன், மேஜர் ஜெனரல் சுவாமிநாதன் ஆகியோருடன் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
குடியரசுத் தலைவர் மாளிகையில்
35 துறைகள் உள்ளன. அவற்றில்
19 துறைகள் மின்னாளுகையின்
(இ-கவர்னன்ஸ்) கீழ் கொண்டு வரப்பட்டன.

No comments:

Post a Comment