Friday 12 July 2013

2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடுஜூலை 12,2013,08:32 ISTby DINAMALAR

சென்னை: வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.
ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் முதல், செப்டம்பர் வரை, முதல் பருவம்; அக்டோபர் முதல், டிசம்பர் வரை, இரண்டாம் பருவம்;  ஜனவரி முதல், ஏப்ரல் வரை, மூன்றாம் பருவம் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதன்படி, பாடப் புத்தகங்கள், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியே அச்சடிக்கப்பட்டு, மாணவருக்கு வழங்கப்படுகின்றன. இரண்டாம் பருவத்திற்காக, 2.29 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 100 அச்சகங்களில் நடந்து வருகின்றன.
பல அச்சகங்களில் இருந்து, பாடப் புத்தகங்கள் தயாராகி, வெளிவர ஆரம்பித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, செப்டம்பர், கடைசி வாரத்தில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக வழங்கப்பட்ட, பிளஸ் 1 புத்தகங்களின் பின்பக்க அட்டையில், மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள், அச்சடிக்கப்பட்டுள்ளன.
"காணாமல் போகும் குழந்தைகள், கொடுமைக்கு இரையாகும் குழந்தைகள், வீட்டிலிருந்து ஓடிப்போன குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள், "1098" என்ற எண் மூலம், "சைல்டு லைன்" அமைப்பை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்" என அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம், அடுத்த கல்வி ஆண்டில், மேலும் சில வகுப்பு புத்தகங்களில் அச்சடிக்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

3 comments: