Monday 8 July 2013

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிய அரசாணை வெளியீடு

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைத் தவிர்த்து, தமிழகத்தில் பிற பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வரன் முறைப்படுத்த, கடந்த 2002ல் தமிழ்நாடு மாநகராட்சி சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்து, ஐகோர்ட் உத்தரவால் அது கைவிடப்பட்டது.அதனைக் கொண்டு வந்த அதே அ.தி.மு.க., அரசு, 2007 ஜூலை 1க்கு முன்பாக தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 2 அரசாணைகளை (எண்:234 மற்றும் 235 ) கடந்த ஆண்டு அக்.,30ல் வெளியிட்டது.

தீத்தடுப்பு வசதிகள், அவசர வழிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குனரிடம் சான்று பெற வேண்டும்; கட்டடத்தின் வளாகத்திற்குள் அல்லது 250 மீட்டர் தூரத்துக்குள் "பார்க்கிங்&' வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்; கட்டடம் அமைந்துள்ள சாலையின் அகலத்தைப் பொறுத்தவரை, 20 சதவீதம் வரை விதிமீறலை அனுமதிக்கலாம்; பக்கத்திறவிடம் (செட் பேக்) மற்றும் தள வியாபித பரப்பு (எப்.எஸ்.ஐ.,-புளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்) விதிமீறல், 50 சதவீதம் வரை இருக்கலாம் என்பது போன்ற நிபந்தனைகள் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

கட்டடம் அமைந்துள்ள நில பயன்பாடு, அதற்குரியதாக மட்டுமே இருக்கவேண்டும்; விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்டடம் கட்டியிருந்தால், அதை வரன்முறைப் படுத்த முடியாது; உரிய அதிகார அமைப்பிடம் திட்ட அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே வரன்முறைப்படுத்த வேண்டும்; நகராட்சி, மாநகராட்சிகளின் அதிகாரத்துக்குட்பட்ட கட்டடங்களுக்கு அந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாகவும், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ளூர் திட்டக்குழுமம் போன்ற நகர ஊரமைப்புத்துறை மூலமாகவும் இதற்காக விண்ணப்பிக்குமாறும் அரசாணை அறிவுறுத்தியிருந்தது.

இந்த அரசாணையின்படி, தங்களது கட்டடங்களை வரன்முறைப்படுத்திக்கொள்ள, சில சலுகைகளை வழங்க வேண்டுமென்று, தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதிக்கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதாவது, அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; மொத்தப்பரப்பில், 10 சதவீத இடங்களை (ரிசர்வ் சைட்) உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அந்த இடங்களை திறந்த வெளி அல்லது பூங்காவாக தாங்களே பராமரித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தன.அதனை ஏற்றுக்கொண்டுள்ள தமிழக அரசு, கடந்த 26ம் தேதியன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஓர் அரசாணையை (எண்:161) வெளியிட்டுள்ளது.

இதன்படி, கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீதத்தைச் செலுத்தினால் போதும்; ஆறு மாதங்களுக்குள் இத்தொகையைச் செலுத்துவோர்க்கு மட்டுமே இது பொருந்தும்; அத்துடன், 10 சதவீத திறந்த வெளி இடங்களில் (ரிசர்வ் சைட்) கட்டடம் எதுவும் கட்டக்கூடாது; மைதானமாக பயன் படுத்தக்கூடாது; அந்த இடங்களை பூங்காக்களாக அந்தந்த கல்வி நிறுவனங்களே பராமரிக்கலாம்.

இந்த அரசாணையால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய கட்டமைப்புக் கட்டணத்தில், 50 சதவீதம் இழப்பு ஏற்படும்; தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவன கட்டடங்கள் செலுத்த வேண்டிய தொகை என்று கணக்கிட்டால், இது பல நூறு கோடி ரூபாயைத் தாண்டும்; இதைக் குறைத்ததன் பின்னணியில், பெரும்தொகை கை மாறியிருக்க வாய்ப்புள்ளதாக நகர ஊரமைப்புத்துறை அலுவலர்களே சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில், அனுமதியே பெறாமல், கணக்கிலேயே வராமலிருந்த கல்வி நிறுவன கட்டடங்கள், அங்குள்ள திறந்தவெளியிடங்கள் ஆகியவை குறித்த விபரங்கள் இதனால் தெரியவருமென்றும் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment