Wednesday 17 July 2013

பத்திரமா ஊருக்கு வந்தாச்சு விடைபெற்ற தந்திக்கு ஒரு மாத கண்காட்சி

சென்னை : கடந்த 163 ஆண்டுகளில் பல்வேறு காலக்கட்டங்களில் அனுப்பப்பட்ட தந்திகளின் கண்காட்சி அண்ணாசாலை தலைமை
அஞ்சலகம் உள்ள தமிழ் நாடு அஞ்சல் வட்டத் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதற்கு தென்னிந்திய அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இச்சங்க உறுப்பினர் சேகரித்த 1856, 1860, 1886 முதல் 2001 வரை பல்வேறு ஆண்டுகளில் அனுப்பப்பட்ட தந்திகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் உள்ளூர் முதல் உலக நாடுகள் பலவற்றுக்கும் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட வாழ்த்து, இரங்கல், வசூல் என பல்வேறு தகவல்கள் அடங்கிய நூற்றுக்கணக்கானவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தந்திகள் குறித்த ஆங்கில குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. வாழ்த்து தந்திக்கும், துக்க தந்திக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வண்ணப்பூக்களுடன் Ôவாழ்த்துÕ என்று இந்தி, ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. 

கண்காட்சியில் துக்க தந்திகளை விட, ''Ôபத்திரமாக ஊருக்கு வந்து சேர்ந்து விட்டேன், தொகை எப்போது கிடைக்கும், நீ வர வேண்டாம்'' என்பது போன்ற தந்திகள் அதிகம் உள்ளன. தந்தி சேவைக்காக தனித்தனியே அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவங்கள், தகவல் படிவங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. அதேநேரத்தில் 2வது உலகப்போர் நடந்த சமயத்தில் காகிதம் தட்டுப்பாடு காரணமாக கிடைத்த காகிதத்தில் தந்தி விவரங்களை எழுதி பட்டுவாடா செய்துள்ளனர்.

கண்காட்சியை பார்க்கவந்த தனியார் நிறுவன பொறியாளர் சத்தியமூர்த்தி ரமேஷ் கூறுகை யில், ''தொலைபேசி புழக்கம் அதிகமில்லாத எங்கள் கல்லூரி காலங்களில் நண்பர்கள் சந்தித்து கொள்ளவும், தேர்வு விவரங்களை பரிமாறிக் கொள்ளவும் தந்தியை பயன்படுத்துவோம்'' என்றார். மேலும், ''தந்தி அனுப்பும் முறை, அதற்கான சாதனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். விளக்கங்களையும் தமிழில் வைக்க முயற்சிக்கலாம்'' என்றும் தெரிவித்தார்.

ஒரு மாதம் வரை நடைபெற உள்ள கண்காட்சி குறித்து அஞ்சல்தலை சேகரிப்பு மைய அரங்கின் வெளியிலோ, சாலையிலோ அறிவிப்பு பேனர்வைக்காததால் எங்கு நடக்கிறது என்று கண்டுபிடிப் பதே சிரமமாக உள்ளது.

No comments:

Post a Comment