Thursday 26 December 2013

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் சரிபார்ப்பு

      தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 
 
 
         இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு ஏற்கெனவே ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (மேல்நிலை) ராஜராஜேஸ்வரி அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


          அனைத்துப் பள்ளிகளும் வருகிற ஜன.1ம் தேதி முதல் 3ம் தேதி மாலைக்குள் ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களை ஜன.4ம் தேதிக்குள் அனைத்துப் பள்ளி களும் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். திருத்தங்கள் எதுவும் இல்லையெனில் ‘சரி பார்ப்பு பெயர் பட்டியல் கவனத்துடன் சரி பார்க்கப்பட்டது, திருத்தங்கள் ஏதும் இல்லை‘ என பள்ளித் தலைமை ஆசிரியர் சான்றளித்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களை ஜன.7ம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பின்னர் பெயர், பிறந்த தேதி, பள்ளி போன்றவற்றில் சில சமயங்களில் அச்சுப் பிழைகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையால் மதிப்பெண் சான்றுகளுடன் மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு ஓட வேண்டியுள்ளது. இதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் கால விரயமும் ஏற்படுகிறது. இதை தவிர்த்து எந்தப் பிழையும் இன்றி மதிப்பெண் பட்டியல் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment