Friday 25 October 2013

10, +2 தனித்தேர்வு; இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அக்.25 (இன்று) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வு செப்., 23 முதல் அக்., 1 வரையிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கான தனித்தேர்வு செப்.,23 முதல் அக்.,5 வரையிலும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் தயாராக உள்ளன.
இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே. தேவராஜன் கூறியது: 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தயாராக உள்ளன. தாங்கள் எழுதிய தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் நேரில் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வுகளின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படாது. மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். அக்டோபர் 25 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும்.
தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களது வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்
தனித்தேர்வுகள் முடிவடைந்த மூன்றே வாரங்களில் மாணவர்களுக்கு இந்தாண்டு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தேர்வுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகள் மற்றும் தேர்வுத்துறை பணியாளர்களின் சிறப்பான பணியே இதற்குக் காரணம் என்றார் தேவராஜன்.
ஆன்-லைன் முறை மூலம் விண்ணப்பித்தல், புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள், டம்மி எண்ணுக்குப் பதிலாக கம்ப்யூட்டர் மூலம் ரகசிய பார் கோடு உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அக்டோபர் மாதத் தேர்வில் அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றங்கள் சிறப்பான பலனை அளித்துள்ளதைத் தொடர்ந்து பொதுத்தேர்வுகளுக்கும் புதிய முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment