Sunday 22 September 2013

பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி




"எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்' என, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது..


பார்லிமென்ட் உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு எம்.பி.,க்கும், ஆண்டுதோறும், 5 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு எம்.பி.,யும், தன் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். லோக்சபா எம்.பி.,க்களுக்கு, அவர்கள் சார்ந்துள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய முடியும்.
ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரிந்துரைக்கலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளில், எந்தெந்த பணிகளுக்கு, பரிந்துரை செய்யலாம் என்பது ஏற்கனவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், புதிதாக, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்களை வாங்க பரிந்துரை செய்யலாம். ஆரம்பப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், மேஜை, நாற்காலிகள் வாங்க பரிந்துரை செய்யலாம். இந்த வகையில், ஆண்டொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய் அனுமதிக்கலாம். அதிலும் ஒரு பள்ளிக்கு, ஆயுட்கால அதிகபட்ச அளவு, 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுமதிக்க முடியும். அதே போல், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டடம் போன்ற கட்டுமான வசதிகளை ஏற்படுத்த பரிந்துரை செய்யலாம். ஆனால், எம்.பி.,யோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ, அந்த சங்கத்தில் உறுப்பினர்களாகவோ, நிர்வாகிகளாகவோ இருக்கக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment