Saturday 28 September 2013

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

சென்னை: அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது" என்றார்.

No comments:

Post a Comment