Sunday 9 June 2013

பள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்தில் இருந்து, 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி உள்ளிட்ட, 30 மாவட்டங்களில், 6 வயது முதல், 14 வரை உள்ளோர் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்தக் கணக்கெடுப்பின் படி, 2008-09ல், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 11,592 ஆக இருந்தது. 2010-11ல், 52,692 ஆகவும், 2011-12ல், 58,520 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, பள்ளி செல்லாதோர் எண்ணிக்கையில், விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

வறுமை, வேலை தேடி இடம் பெயர்தல் ஆகிய காரணங்களால், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில், சுமங்கலி திட்டத்தின் கீழ், 13 வயதுள்ளோர், நூற்பாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு மூன்றாண்டு சம்பளமாக, 30 ஆயிரம் ரூபாயிலிருந்து, 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இத்தொகையை நம்பி, பல பெற்றோர், தங்களுடைய பெண் குழந்தைகளை, இத்திட்டத்தில் வேலைக்கு சேர்க்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், ஜவுளி, சாயப்பட்டறை தொழிற்சாலைகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இதில் நல்ல வருமானமும் பெறுகின்றனர்.

சிறு வயதிலேயே குழந்தைகள் அதிக சம்பளம் ஈட்டுவதால், பெற்றோர், அவர்களை வேலைக்கு அனுப்பவே விரும்புகின்றனர். திருநெல்வேலியில், ஜவுளி, பீடி தயாரிப்பு தொழிலில், அதிகளவில் குழந்தைகளை பயன்படுத்துகின்றனர். இதனால், தென்மாவட்டங்களில் பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை குறைக்க வேண்டுமென்றால், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலவச கல்வி திட்டத்தை, முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

குழந்தை தொழிலாளர் சட்டம், முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அருணோதயா தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் வெர்ஜில் கூறியதாவது:

அதிக மாணவர்கள், பள்ளி படிப்பில் சேர்கின்றனர். ஆனால், பொருளாதார வசதியின்மை காரணமாக, மேற்படிப்பை தொடருவதில் தான் சிக்கல் நிலவுகிறது. நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில், பள்ளி படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதிகள் இன்மை உள்ளிட்ட காரணங்களால், தனியார் பள்ளிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன. எனினும், ஏழை, எளிய குழந்தைகளால், தனியார் பள்ளியிலும் படிக்க முடிவதில்லை. இதனால், கல்வியை கைவிடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு, வெர்ஜில் கூறினார்.

No comments:

Post a Comment